கோவை: காட்டு யானை சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வரகலியாறு வனத்தில் விடப்பட்ட ‘சின்னத்தம்பி’ யானை நேற்று உடுமலைபேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் உலா வந்தது. கோவை சின்னதடாகம் பகுதிக்குள் புகுந்த சின்னத்தம்பி என்றழைக்கப்படும் காட்டு யானை, கடந்த 25ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வரகலியாறு வனத்தில் விடுவிக்கப்பட்டது. இதன் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி கொண்ட பட்டை பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் வனத்துறையினர் அந்த யானை எங்கெங்கு செல்கிறது என கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னத்தம்பி யானை பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், அங்கலகுறிச்சி பகுதியில் குடியிருப்புகளில் சுற்றி திரிந்தது. வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் திருப்பூர் மாவட்ட எல்லையான அர்த்தநாரிபாளையத்துக்கு இந்த யானை வந்தது.
அங்கிருந்து தேவனூர்புதூர், ராவணாபுரம், கரட்டுமடம், புங்கமுத்தூர், எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம், சர்க்கார்புத்தூர் ஆகிய கிராமங்களில் குடியிருப்பு வழியாகவும், சோளக்காடு வழியாகவும் வலம் வந்தது. ஆனால் பயிர்களை சேதம் செய்யவில்லை. பொதுமக்களையும் அச்சுறுத்தவில்லை. இந்நிலையில் இன்று காட்டுயானை சின்னதம்பி திருப்பூர் மாவட்டம் மைவாடி ரயில் நிலையத்திற்குள் புகுந்தது. சின்னதம்பி யானையை பார்க்க ஏராளமான பொமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனிடையே காட்டு யானை சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாததால் கும்கியாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி